கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் எல் ஆன் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கள் திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஜனவரி 9, 10) கல்லூரியின் வேளாண் பொறியியல் துறைகளின் சார்பில் விவசாயத்தை முதன்மைபடுத்தி "வேளாண் திருவிழா 2017" கொண்டாட்டம் துவங்கியது.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்த கண்காட்சியும், கருத்தரங்கமும், கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன.

மேலும் இந்த கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேம்பட்ட வேளாண் இயந்திரம் மற்றும் சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் இக்கல்லூரி பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் மாணவ, மாணவிகளும் தங்களுடைய நவீன கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

இக்கண்காட்சியானது, விவசாயிகளுக்கும், மாணவ- மாணவிகளுக்கும், வேளாண் துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்புகளையும், இயந்திரங்களையும் பற்றி அறிந்துகொள்ள வழி வகுக்கும்.

இக்கண்காட்சி மற்றும் துவக்க விழா இன்று ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கோவை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜேக்கப் அண்ணாமலை விழாவினை தொடக்கிவைத்து உரையாற்றினார்.

ஜெயின் நீர்பாசன குழுமத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.நாராயணன், புதுதில்லி தேசிய விதைக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் மற்றும் பொறியியல் பிரிவுத் தலைவர் பொறியாளர் எஸ்.குமாரசெல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து, வேளாண் பொறியாளர் சண்முகம், பசுமைக்குடில் சாகுபடி கலந்துரையாடலை துவக்கி வைத்தார். வேளாண் பொறியாளர் பிரபுசங்கர், "மண்ணில்லா விவசாயம்" என்பது குறித்து சிறப்புரையாற்றினார். கால்நடை வளர்ப்பு, பால்வளம், பால்பொருட்கள் உற்பத்தி மற்றும் இந்தியாவில் பால் பொருட்கள் உற்பத்திக்கு முனைவர் குறியன் ஆற்றிய பங்கு எனும் தலைப்பில் பாலமுருகன் கருத்துரை வழங்கினார்.
ஆரோக்கியமான கீரை சாகுபடி குறித்து ஜெகநாதன், நம் நாட்டு இன மாடுகளினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

இக்கண்காட்சி குறித்து ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தலைவர் முனைவர் செ.தங்கவேலு கூறுகையில், இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாணவ, மாணவிகளுக்கிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு அறியச்செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட இது வழிவகுக்கும்" என கூறினார்.